Popular Posts

Thursday, January 15, 2015

MAHAPERIYAVALIN ARUL VAKKU PART VI


ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு பாகம் 6
(continuation of part 5)


05 06 2014      51

தெய்வ நம்பிக்கைக்கு சின்னவா, பெரியவான்னு பேதம் கிடையாது. பிரகலாதனை பெருமாள் காப்பாத்தின மாதிரி திருநாவுக்கரசரை நமச்சிவாயம் காப்பாற்றியிருக்கிறார். இதில் யார் ஒசத்தி?   இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம்னு நடந்தா ஊர் சேர முடியாது. ஒரே வழியாய் உறுதியாய் நம்பணும்.   மாணிக்கவாசகர் குதிரை வாங்க வைச்சிருந்த பணத்துலே கோவிலை சீர்திருத்தினார். அதுக்காகப் பன்னிரண்டு வருஷம் ஜெயிலிலே இருந்து படாதபாடுபட்டார். எந்த சுவாமியும் தப்பு செஞ்சா சும்மா விட்டுடலே! அதனாலே நேர்மையாக, ஒழுக்கமாக, தர்மமா நடந்துக்கணும். குறுக்கு வழியிலே புகழ் தேடப்படாது.     அப்படி வர்ற புகழ் சும்மா வராது. துணைக்கு தண்டனையையும், அபவாதத்தையும் சேர்த்துண்டு வரும். அதனாலே பிறத்தியாருக்கு சொந்தமான எதுக்கும் ஆசைப்படக்கூடாது.  

09 06 2014      52

ஒரு திவலை ஜீவன் தான் ஒரு உயிராகிறது. அது பல உயிர்களை உண்டாக்கும். அந்த உயிர் உன்னதமாயிருக்க விரும்பும் தகப்பன் ஸம்ஸ்காரங்களை விடமாட்டான். ராமனின் பாட்டனார் அஜன்.   அஜனின் தந்தை ரகு. அஜகுல திலகன் என்று ஒரு இடத்திலும் வரவில்லை. மாறாக பல இடத்தில் கொள்ளுத் தாத்தாவின் பெயரைச் சேர்த்து ரகுநந்தனன், ரகுகுல திலகன், ரகுராமன் என்று ஸ்ரீராமர் சிறப்பிக்கப்படுகிறார். ராகவன் என்றாலும் ரகுகுலத் தோன்றால் என்று அர்த்தம். நம் வம்சம் நன்றாயிருக்க வேண்டும் என்று பாடுபடுபவர்களின் பெயரை மங்கும்படி பகவான் விடுவதில்லை! ரகுவின் தகப்பனாரான திலீபன் ஒரு பிள்ளை பிறக்க காமதேனுவின் பெண் நந்தினியை கண் போல் காத்து, அதன் குளம்படி மண்பட்டு புனிதனாகி தந்தை என்ற பேற்றை அடைந்தான்.    
அதனால் தான் 'தவறாத சந்தானம்' என்று அதைப் பதினாறு பேறுகளில் ஒன்றாக வைத்தார்கள். ஒரு அபூர்வ விருந்தாளி வருகிறார். அவரை வரவேற்க என்னவெல்லாம் ஆயத்தம் செய்கிறோம். உங்களைப் பெருமைப்படுத்த  ஈஸ்வரன் ஒரு ஜீவனை அனுப்ப தீர்மானித்திருக்கிறார் என்பது தான் கர்ப்பம். அந்த உயிர் உங்களுக்கு கட்டுப்பட்டு, உங்களோட லாப நஷ்டங்களைப் பகிர்ந்துண்டு வாழப்போறது. அதுக்கு மரியாதை பண்றதில்லையா?

12 06 2014    53
தேனீக்கள் தேனை கஷ்டப்பட்டு சேர்க்கறது. மனுஷன் ஒரே சமயத்திலே தேன் கூட்டை ஒடச்சுடறான். அதுக்காகக் தேனீ சோர்ந்து போறதில்லே. மறுபடியும் அதே மரத்திலே தேனடை வைக்கிறது. சம்சாரத்திலே கஷ்டங்கள், சிக்கல்கள் வரத்தான் செய்யும். அதுக்காக ஓடிப்போறதோ, காவிகட்டறதோ, தற்கொலை பண்ணிக்கறதோ தப்பு. சமாளிக்கறவனைத்தான் விதியை மதியாலே ஜெயிசுட்டாங்கறோம்.

16 06 2014      54
சிலந்தி தன் வாயாலே வலைபின்னி, வேண்டாமென்கிறப்போ தானே அதைத் தின்னுடறது. பகவானும் இந்த லோகத்தைப் படைக்கிறார். கல்பம் முடிஞ்சதும் தனக்குள்ளே ஐக்கியமாக்கிக்கிறார். நாம எத்தனை முறை அழிச்சாலும் சிலந்தி வலை பின்னிடும். அது மாதிரி எத்தனையோ இடைஞ்சல் வரும். ஆனாலும் கர்மாக்களை விடப்படாது. முயற்சி செய்யாதவனுக்கு விதி நன்னாயிருந்தாக்கூட பகவான் ஒத்தாசை பண்றதில்லே!

20 06 2014     55
'அநயத சரணம் நாஸ்தி; த்வமேவ சரணம் மம' என்ற வாசகப்படி எனக்கு வேறே ரக்ஷணம் இல்லை, நீயே காப்பாற்ற வேண்டும் என்று சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்துவிட்டால் அவர் நிச்சயமாக சம்சார உளைகளில் அகப்பட்டுக்கொண்டவனுக்கு கை கொடுப்பார். நாம் பேசற பேச்சிலேயே அவர் இருக்கிறார். 'அ' என்கிற எழுத்து சிவனோட சிரசு. 'ஆ' சிவனோட நெற்றி. 'இ' வலது கண். 'ஈ' இடது கண். 'உ' வலது காது. 'ஊ' இடது காது. 'ரு' வலது கன்னம். 'ரூ' இடது கன்னம். 'லு' வலது நாசி. 'லூ' இடது நாசி. 'ஏ' மேலுதடு. 'ஐ' கீழுதடு. 'ஓ' மேல் பல் வரிசை. 'ஒள' கீழ் பல்வரிசை. 'அம்' வலது தாடை. 'அ:' இடது தாடை. காதி பஞ்சாட்சரங்கள் வலது பக்கமுள்ள ஐந்து கரங்கள். சாதி பஞ்சாட்சரங்கள் இடது பக்கமுள்ள கைகள்.   தாதிபஞ்சாட்சரங்கள் கால்கள். 'ப' என்ற எழுத்து வயிறு. 'ம' என்ற எழுத்து மனசு. 'ஹ' தொப்புள். இப்படி அக்ஷர வடிவமாயிருக்கிறார் சிவன்.
'ஏவம் சப்த மயம் ரூப மகுணஸ்ய குணாத்மன:' என்கிறது சிவ புராணம்.  நிர்குணனான சிவன் நாத சொரூபன்.

23 06 2014   56
நமக்கு அநேக துன்பங்கள் ஏற்படுகின்றன. நாம் பல தப்புகள் பண்ணுவதால் துன்பங்கள் வருகின்றன. இந்த தப்பைப் பண்ணினோம் அல்லவா, அதற்காகத்தான் இந்த கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று சில சமயங்களில் நமக்கே தெரிகிறது.   சில சமயங்களிலே நாம் ஒன்றும் தப்பு பண்ணவில்லையே, எனக்கு கஷ்டம் வந்திருக்கிறதே என்று வருத்தப்படுகிறோம்.   காரணம் தெரியும்போது நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள பார்க்கிறோம். தெரியாதபோது இன்னும் அதிக துக்கத்தை உண்டாக்கி கொள்கிறோம். எல்லாக் காரியங்களுக்குமே நமக்குக் காரணம் தெரிந்து தான் இருக்க வேண்டுமா என்ன? நமக்கு காரணம் தெரியாமலும் பல துன்பங்கள் உண்டாகலாம். எப்படி இருந்தாலும் நமக்கு ஏற்படுகிற துன்பம் ஏற்பட்டே தீரும்.   என்றாலும் நாம் துன்பப்படுகிறோமே என்பதற்காக மற்றவர்களும் துன்பப்படட்டும் என்ற எண்ணம் நமக்கு வரக்கூடாது.  

27 06 2014    57
ஒவ்வொரு நாளும் ஏதோ பயிர் தொழிலோ, கூலி வேலையோ, உத்தியோகமோ செய்கிறோம். நமது உடலையும் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக ஏதாவது தொழில் செய்கிறோம். இது அவசியமா, நாம் ஏன் சாப்பிட வேண்டும்? சாப்பிட்டாவிட்டால் செத்து போய்விடுவோம். எப்படியும் ஒரு நாள் சாகவேண்டியது தானே! பின் ஏன் சாப்பிட்டு உடலைக் காப்பாற்றுகிறோம்? சீக்கிரம் செத்தால் பாவம் குறையுமே! என்றால் நாம் இந்த ஜன்மத்தை சுத்தப்படுத்த எவ்வளவு நாள் ஜீவித்திருக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அதிக தியானம் செய்யலாம். அதற்காக நாம் ஜீவித்திருக்க வேண்டும். சாப்பிட வேண்டும். இந்த ஜென்மத்தில் தான் பாவத்தைக் குறைத்துப் புண்ணியத்தை அதிகப்படுத்தி கொள்ளமுடியும். இதற்காகவே ஈஸ்வரன் நமக்குக் கொடுத்திருக்கும் தேகத்தை நாமாகக் கெடுக்கக்கூடாது.   காமத்தை விளைவிக்கும் சினிமா பார்த்தல், கெட்ட புஸ்தகங்களைப் படித்தல், கெட்ட காரியங்கள் செய்தல் இவற்றைக் தவிர்க்க வேண்டும். உடலுக்கு மாத்திரம் உபயோகப்படக் கூடியதைச் செய்யாமல் உடலழிந்த பிறகும் நாம் க்ஷேமமாக இருப்பதற்காக ஆத்மாவிற்கு அழுக்கு வராமலிருப்பதற்கு வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் கொஞ்சமாவது இரண்டு நிமிஷமாவது உண்மையோடு கடவுளை தியானிக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒரு சிறு நெருப்புப் பொறி எப்படி ஒரு பஞ்சு மூட்டையை எரித்து விடுகிறதோ அவ்விதமே அது பாவத்தை அழித்துவிடும்.  

01 07 2014  58
சங்கடம் யாருக்குத்தான் இல்லே. உப்பு விக்கறவன் மழை பெய்யக்கூடாதேன்னு வேண்டிக்கிறான். குடியானவன் 'சாமி, மழை பெய்யணுமேன்னு' பிரார்த்திக்கிறான். பகவானுக்கும் தர்ம சங்கடம் தான். ஒரு பக்தன் இதைப் பாட்டாவே பாடி இருக்கான்.  

ஏகா பார்யா ப்ரக்ருதி ரசலா சஞ்சலா ச த்விதீயா
புத்ரோ நங்கஸ் த்ரிபுவனஜயீ மன்மதோ துர்நிவார: I
சேஷ: சய்யா சயனமுத்திர் வாஹனம் பந்னகாரி:
ஸ்மாரம் ஸமாரம் ஸ்வர்க்ருஹ சரிதம் தாரு பூதோ முராரி: II 

ஒரு 
சம்சாரம் சஞ்சல புத்தியுடையவள். ஓர் இடத்தில் நிரந்தரமாக வாசம் செய்யாதவள். இன்னொரு மனைவியான பூதேவி நடமாட்டமே இல்லாதவள். மன்மதன்னு ஒரு புத்திரன். தவம் செய்கிற பரமசிவன்மேல அம்புவிட்டு எரிஞ்சு போயிட்டான்.   பிரம்மான்னு ஒரு பிள்ளை, அவனும் பார்க்காததைப் பார்த்தேன்னு பொய் சாட்சியையும் தயார் பண்ணிண்டு வந்து சிவனாலே ஒரு தலையை பறி கொடுத்த அவமானம் மனசை வாட்டறது. அவனுக்கு வேதத்தைச் சொல்லிக்கொடுத்து தபஸ் பண்றவாளுக்கு வரத்தை தர அதிகாரத்தையும் கொடுத்தேன். இவன்பாட்டிலே வரத்தைக் கொடுத்துடறான். நான் அதனாலே பூலோகத்திலே போய் அவதாரம் எடுத்து ரொம்ப சிரமப்பட்டேன். நிம்மதியா படுக்காவாவது முடியறதா? படுக்கிற இடம் சமுத்திரம். படுக்கையானது பாம்புங்கறது என்னோட தலை விதி. சரி, எங்கேயாவது போயிட்டு வரலாம்னா எனக்கேற்பட்ட வாகனமான கருடன், பூமியிலே பாம்பைப் பாத்துட்டா என்னை அந்தரத்திலே விட்டுட்டு சர்'னு பூமியிலே பாஞ்சுடறது. இதெல்லாம் தாங்காம தான் பூரி ஜகன்னாத்திலே கட்டையா நிக்கறேன். பதினாலு வருஷம் காட்டிலே கஷ்டப்பட்டு சம்சாரத்தைத் தேடி அலைஞ்சு சமுத்திரத்திலே அணைகட்டி... அப்பப்பா!  
எத்தனை கஷ்டங்கறது இதோட அர்த்தம். அதனாலே எந்த ஜன்மாவிலேயும் பாடம் இருக்கு. துஷ்டன்கிட்டேயும் ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கும்.

07 07 2014    59
ஸதீ என்கின்ற உமா தேவி புஷ்ப பாணத்தை அளித்து உலகெல்லாம் ஜெயிக்கும்படி மன்மதனுக்கு அருள் புரிந்தாள்.   பரமசிவன் நெற்றிக்கண்ணால் எரித்த காமனிடமிருந்து குமரக்கடவுளை அளிக்க, கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் தான் ஏற்றுக்கொண்டாள்.   

 "மநோரூபேக்ஷூ கோதண்டா பஞ்ச தன்மாத்ர ஸாயகா:" என்பது தேவி சஹஸ்ரநாமம். அன்னையை அண்டினால் அவள் நம்மைக் கைவிடமாட்டாள். மனதை வில்லாகவும், இந்திரியங்களை அம்பாகவும் வைத்திருக்கிறாள் தேவி. தேவியை நாம் தியானம் செய்தால் மனதாலும் புலனாலும்  உண்டாகும் தீமை நம்மிடம் வராது. மனம் வெளியில் போகாதிருக்க அம்பிகையை தியானம் செய்.   

29 07 2014    60
ஒரு காதாலே  நல்லதை வாங்கி மனசிலே நிறைச்சிக்கணும்.   தோல் இல்லாத திராட்சை, ஆப்பிள் மாதிரி சத்விஷயங்கள் அப்படியே போனா பரவாயில்லே. வாழைப்பழம் மாதிரி, பலாப்பழம் மாதிரி அன்னாசிப்பழம், மாதுளை மாதிரி சத்தும், அசத்தும் கலந்து உள்ளே போயிட்டா என்ன பண்றது? கண்டதைப் போட்டா வயிறு நாத்தமெடுக்கும். மனசும் கெட்டு போகுமே! மனசைப் பழக்கிட்டோமானா வேண்டாததை அழகாப் பிரிச்சு இன்னொரு காது வழியா வெளியே அனுப்பிச்சிடும். சுத்தமான மனசுலே நல்ல வாசனைகள்தான் வரும். சில பேரைப் பார்க்கப்படாதுன்னு குடையாலே மறைச்சுண்டு போவா... சில தெரு வழியா போனா மூக்கைப் பொத்திக்கணும். உங்ககிட்டே நல்ல வாசனை இருந்தா யாரும் மூக்கைப் பொத்திக்க வேண்டாம். யார் கிட்டேயும் எதையும் இனாமா வாங்கறதில்லே.. யார் கிட்டேயும் கடுமையாப் பேசறதில்லேன்னு வைராக்கியம் வைச்சுக்கணும்.

(To be continued....)

No comments:

Post a Comment