Popular Posts

Monday, January 19, 2015

SREE MAHAPERIYALIN ARULVAKKU PART VIII

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு பாகம் 8
(Continuation of Part 7)


01.10.2014  71
"வேதத்தை எப்படி நம்புவது? அதற்கு ஒரு யுக்தி சொல்லுங்கள்!" என்று கேட்பதே பொருத்தமில்லை. யுக்திக்கு எட்டாதத்தைச் சொல்லவே வேதம் இருக்கிறது. எதை ருசுவினால் நிரூபிக்க முடியாதோ, எங்கே புத்தி எட்டாதோ, அப்படிப்பட்ட பரம சத்தியங்களைத் திவ்விய திருஷ்டி உள்ள முனிவர்கள் அறிந்து வேதமாகத் தந்திருக்கிறார்கள். அந்நிய தேச விவகாரங்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அங்கிருந்து வருகிற பத்திரிகைகளில் இருந்து தெரிந்து கொள்கிறோம். லோகத்திலுள்ள கருவி எதனாலுமே தெரிந்து கொள்ள முடியாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக வேத மந்திரங்கள் என்ற பத்திரிகையை ரிஷிகள் தந்திருக்கிறார்கள்.

07 10 2014     72
ஸர்வே வேதா யத்பதம் ஆமநந்தி முதலிய சுருதிகளால் நாம் அறிவது என்னவென்றால், எல்லா வேதங்களும், யோகிகளும், ரிஷிகளும், மற்றுமுள்ள ஞானிகளும் ஒன்றையே அடைய விரும்புகிறார்கள். அந்த ஒன்று 'ஓம்' என்பது தான். ஓம் என்பதைப் பற்றி மாண்டூக்ய உபநிஷத்தில் விரிவாகவும் ஸ்பஷ்டமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
சாந்தம், சிவம், அத்வைதம், சதுர்த்தம், மன்யந்தே, ஸ ஆத்மா ஸ விஜ்ஞேய:
அதாவது, அந்த ப்ரஹ்மம், எல்லாம் ஒடுங்கினதும், சிவமென்று குறிக்க தகுந்தது, இரண்டட்றதும், விசுவ தைஜஸ ப்ராஜ்ஞனுக்கு மேலானதுமாக இருக்கின்றது.

வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிற  நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது பிரச்னம் முக்கியமானது. அதுதான் ஸ்ரீ ருத்ரம். அதற்குள்ளும் "நமச்சிவாய" என்ற பஞ்சாரக்ஷர வாக்கியம் மத்தியிலிருக்கின்றது. அதன் மத்தியில் "சிவ" என்ற இரண்டு அக்ஷரம் அடங்கியிருக்கிறது.   இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பைய தீக்ஷிதர் ப்ரஹ்ம தர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார். அந்த ப்ரஹ்மம் சிவ ஸ்வரூபம் என்று தெரிகிறது.
அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாக சிவ பக்தர்களெல்லாம் ஐந்துவித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.
1    விபூதி பூசிக்கொள்ளுதல்
2    ருத்ராக்ஷம் அணிதல் 
3    பஞ்சாக்ஷ்ர மந்திரத்தை ஜபம் செய்தால், பஞ்சாக்ஷ்ர மந்திரம் உபதேசம் ஆகாதவர்கள் 'சிவ' என்ற பதத்தை ஜபம் செய்தல்
4    பில்வதளத்தால் பரமேசுவரனைப் பூஜித்தல் 
5    ஹ்ருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல்

இவைகளில் ஒவ்வொன்றும் ஈஸ்வரனுக்கு விஷேஷ ப்ரீதியைக் கொடுக்கக்கூடியது.

10 10 2014      73
உமாதேவி நிறைந்த கருணை உள்ளவள். சிறந்த பிரகாசமுள்ளவள். அபாரசக்தி உள்ளவள். ஓம் என்பதே உமா என்றாயிற்று. அ, உ, மா என்ற மூன்றும் ஓம் என ஆயிற்று. வித்யுத் சக்தியில் நெகடிவ் பாசிடிவ் என்பன போலுள்ளது. கோடி சூரியப் பிரகாசமானது அம்பாளது சுவரூபம். ஆனால் தாபத்தை உண்டு பண்ணாது. கோடி சந்திரன் போல் இன்பம் தரும். சிவனுடன் சேர்ந்தே இருக்கிறது. அமிருதத்தில் ருசி. பாலில் வெண்மை. தீயில் பிரகாசம். சந்திரனில் நிலா. புஷ்பத்தில் வாசனை போல் சிவனிடம் ஸஹஜ சிந்தனையானவள். அன்னையை அர்ச்சித்து பேரின்பம் பெறுக.  

துணி அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு அம்பாளின் சரணாரவிந்தத் தியானம் தான் வழி.   

13 10 2014      74
உலகில் கஷ்டம் இல்லாதவன் எவனும் இல்லை. ஒவ்வொருவரும் கஷ்டம் நீங்கி, ஆனந்தமடைய வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். கஷ்டங்களுக்கு அடிப்படையான காரணத்தை கண்டுபிடுத்து அதைப் போக்க வேண்டும். எல்லா துக்கங்களுக்கும் உடல் தான் காரணம். இந்த உடல் ஏற்பட்டதும் பூர்வகர்ம பலன் தான். ஆகவே கர்ம பலனுக்கு அடிப்படைக் காரணத்தை ஒழிக்க வேண்டும்.  
          அதகேந  ப்ரயுக்தோயம்  பாபம் சரதி பூருஷ:,
          அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:

என்று அர்ஜுனன் பகவானைக் கேட்கிறான்.  
இஷ்டமில்லாதபோது கூட மனிதன் பாபச் செயலில் இழுக்கப்படுகிறானே; இது ஏன்? என்பது அர்ஜுனனின் கேள்வி.  
பகவான் இதற்கு பதில் சொல்கிறார். "காம ஏஷ: குரோத ஏஷ:" ஒன்றைப் பெறவேண்டும் என்ற ஆசையும், அதைப் பெறாத போது ஏற்படும் கோபமும்தான் காரணம் என்று. காமக் க்ரோதம் போக வேண்டுமென்றால், நம்மை விட்டு வேறான பொருள் ஒன்று இருக்கிறது என்ற நினைப்பு போய் எல்லாம் பரமாத்ம சுவரூபம் என்று மெய்யுணர்வு ஏற்படவேண்டும். உலகம் வெவ்வேறு விதமாகத் தோற்றம் அளித்தாலும் ஞானிக்கு எல்லாம் பரமாத்ம சுவரூபமாகவே விளங்கும்.

15 10 2014      75
வர வர வித்யையின் தரம் குறைந்து கொண்டு வருகிறது. மக்கள் எவ்வளவு படிப்பற்றவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலைக்கு குரு பீடங்களும் இறங்கிவிடுகின்றன. சிறந்த அறிவாளிகளாக சிஷ்யர்கள் கூட்டம் இருந்தால் அதற்கு தகுந்தாற்போல் குருவும் தம் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டு. குரு பீடங்களிலுள்ள குருமார்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டுமென்றால் அதன் பொறுப்பு சிஷ்யர்களதுதான். முற்காலத்தில் அரசர்கள் மஹாவித்துவான்களாக இருப்பார்கள். அவர்களுடைய சபையும் அறிவாளிகள் நிறைந்ததாக இருக்கும். வித்யை என்றால் ஆயுள் முழுவதும் ஞானம் விருத்தியாகக் கூடியதாக இருத்தல் வேண்டும். முன்காலப் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் கிடையாது. ஆத்ம ஞானத்தைக் கொடுக்கக்கூடிய படிப்புதான் ப்ரஹ்மவித்யை; எல்லாவற்றிலும் உயர்ந்த வித்யை; சத்ருவைக் கூட தெய்வமாக பாவிக்கும் நிலையை அளிக்கவல்ல வித்யை. அத்தகைய வித்யை அடைய முயல வேண்டும். 

17 10 2014      76
ஸ்திரீகளுக்குப் புத்திர சோகத்தைக் காட்டிலும் வேறு பெரிய சோகம் கிடையாது. என்றாலும் நரகாசுரன் மரணமடைந்த போது அவனது தாய் லோக முழுவதையும் ஏக சக்ராதிபதியாகப் பரிபாலனம் செய்த புத்திரன் போய் விட்டானே என்ற துக்கத்துக்கு இடம் தர வில்லை. "அவனுக்கு பகவானை நேரில் பார்க்கிற பாக்கியம் கிடைத்ததே" என்று மனதை ஆறுதல் செய்துகொண்டு, லோக க்ஷேமமாக அன்று பண்டிகை கொண்டாடவேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொண்டாள். 'என் பிள்ளை போனது இருக்கட்டும். எனக்கு பிள்ளை போன துக்கம் ஏற்பட்டாலும் லோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு துக்கமும் ஏற்படக்கூடாது, ஆக இன்றைக்கு எல்லோரும் எண்ணை  தேய்த்துக்கொண்டு, புத்தாடை உடுத்திக்கொண்டு, நல்ல விருந்து உண்டு, சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்று பகவானிடம் வேண்டிக் கொண்டாள்.
நரகாசுரனுடைய தாய்க்குத்தான் தன்னுடைய புத்திர சோகத்திலும்கூட உலகம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு வந்திருக்கிறது. அதனால் தான் தீபாவளிக்கு மற்ற எல்லா பண்டிகைகளையும்விட அதிகக் கியாதி.  

21 10 2014      77

அஸ்ஸாம் நாட்டில் பிராக் ஜோதிஷம் என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு பூமாதேவியின் மகன் பௌமன் ஆண்டு வந்தான். அவனுக்குத் தான் நரகாசுரன் என்று பெயர். அவன் அனேக அக்கிரமங்கள் செய்து வந்தான். நிறைய தபஸ் பண்ணினவன் என்றாலும் தாமசமான வரங்களையே வாங்கிக் கொண்டதால் எல்லாரையும் ஹிம்சை செய்து உலகத்தை அடக்கி ஆண்டு வந்தான். ஸ்த்ரீகளுக்கும் சாதுக்களுக்கும் மிகுந்த கொடுமை செய்து வந்தான். அக்கினிக்கோட்டை, வாயுக்கோட்டை எல்லாம் கட்டிக்கொண்டு எதிரிகளிடமிருந்து தன்னை ஜாக்கிரதை செய்துகொண்டான். இருந்த போதிலும் கடைசியில் சுவாமியே கிருஷ்ண பரமாத்வாக அவதரித்தபோது அவனைச் சம்ஹாரம் பண்ணினார். அப்போது அவன் நல்ல புத்தி பெற்றதாக கூறுவதுண்டு. அவனது தாயார் அத்தினத்தை எல்லோரும் கொண்டாட வேண்டுமென்று பகவானிடம் பிரார்த்தித்ததாக சொல்வதுண்டு.
ரணகளத்தில் தத்துவமே பெரிதாக அர்ஜுனன் நினைத்தது போலவே, புத்திர சோகத்தினிடையே உலக ஷேமத்தை பூமாதேவி பெரிதாக நினைத்தது விஷேஷம். நாம் துன்பப்பட்டாலும் லோகம் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது தான் தீபாவளி கொண்டாடுவதன் பயன். இந்த பண்டிகை விட்டுப்போகாமல், இது சம்பந்தப்பட்ட புராணக் கதையும் மறந்து போகாமல் இவ்வளவு காலம் இருந்து வருவது இதற்க்காகத் தான்.  

தீபாவளிப் பண்டிகை கொண்டாடி, பட்டாசு வெடித்து, விருந்துன்பதோடு நாம் நிற்கக் கூடாது. 'நம்மைக் காட்டிலும் லோக ஷேமம் தான் பெரிது' என்ற ஞானத்தை இன்று பெற வேண்டும்.   

23 10 2014      78
இதோ, எனக்கு முன்னால் வாழைப்பழச் சீப்பு வைத்திருக்கிறது. "இதைப் பார். இது மஞ்சளாக இருக்கிறது" என்று சொன்னால் இது மஞ்சளாகத்தான் இருக்கிறது என்று காண்கிறீர்கள். அதற்கு மேல் மனசில் அதைப்பற்றி எந்தப் பிரதி சிந்தனையும் (reaction) எழுவதில்லை. மாறாக, இதே வாழைப்பழத்தைக் காட்டி, "இதோ பார், இது சிவப்பாக இருக்கிறது" என்று நான் சொல்லி இருந்தால்?.. உடனே உங்கள் மனத்தில் ஒரு ஆட்சேப உணர்ச்சி எழுந்திருக்கும். இது மஞ்சள் என்றோ, சிவப்பு என்றோ நான் சொல்லாமல், "இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னால் அப்போது உங்கள் மனசில் ஒரு விதமான பிரதி உணர்ச்சி உண்டாகிறது. மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பது போல் உங்கள் மனசினால் கற்பனை செய்து பார்க்கிறீர்கள். மனசை ஒரு முகப்படுத்தினால் அப்படிப் பாவிக்கவும் முடிகிறது.  

உபாசனை என்பது இப்படிப்பட்டதுதான். பரம்பொருள் இப்படி இப்படி இருப்பதாகப் பாவியுங்கள் என்று பலவிதமான குணங்களைக் கொண்ட பல மூர்த்திகளை காட்டிக் கொடுக்கிறது உபாசனா மார்க்கம். வாழைப்பழம் உண்மையிலேயே மஞ்சள் நிறம் என்பது போல் பரமாத்மாவின் உண்மை குணம் என்ன? அது குணம் கடந்தது என்பதே.  

25 10 2014     79
ஆரம்பத்தில் நமக்குப் பலவித மனோ விகாரங்கள் இருக்கும் போது, 'பரமாத்மா எல்லாம் கடந்தவர்' என்றால் அதில் பிடிப்பு கொள்ள முடியவில்லை. பிறகு ரூபத்தில், குணத்தில் அவரை உபாசித்து, அது முற்றிய நிலையில், எல்லாவற்றுக்கும் அதீதமாக பரமாத்மாவை அப்படியே அனுபவிக்க முடிகிறது. மஞ்சள் பழத்தை மஞ்சளாகவே பார்க்கிறபோது மேற்கொண்ட மனசுக்கு வேலை இல்லாதது போல், பரமாத்மாவைப் பரமாத்மாவாகவே பார்க்கிற போதும், மனசுக்கு வேலை இல்லாமல் போகிறது. உபாசனையின் போது "பரமாத்மாவை இப்படி இப்படி பாவனை செய்தால் அதற்கு இன்னின்ன மந்திரம் ஜபிக்க வேண்டும். இன்னின்ன ஆசாரம் வேண்டும்; இன்னின்ன பூஜா பத்ததி வேண்டும்" என்று விதிகள் இருக்கின்றன. பாவனை போய், அவரை உள்ளவாறு அறிகிற போது எந்த விதியும் இல்லை. செயலும் இல்லை. காரியமாகிற உபாசனை, இப்போது தான் அனுபவமாகிற ஞானம் என்பதாகப் பழுத்து விடுகிறது.  

இந்த ஞானம் நமக்கு ஆரம்பத்திலேயே வந்துவிட்டதாகப் பாவனை செய்துவிடக்கூடாது. உபாசனையே பெரும்பாலான ஜனங்களுக்கு ஞானம் பெற உபாயமாகும். திவ்ய மூர்த்திகள் நாமாகச் செய்கிற பாவனை மட்டுமல்ல. பரமாத்மாவே மகான்களுக்கும் ரிஷிகளுக்கும் இந்த ரூபங்கள் மந்திரங்கள் விதிகள் எல்லாவற்றையும் அநுக்கிரகித்திருக்கிறார். அவற்றை சிரத்தையுடன் பின்பற்றினால் ஞானத்துக்கு வழி உண்டாகும்.

27 10 2014      80
விக்ரஹங்களுக்குக் கோவிலில் விஷேஷம் எதனால் ஏற்பட்டதென்றால் மஹரிஷிகள் அவர்களுடைய தவத்தை அங்கு அமர்த்தியிருக்கிறார்கள். படம் பூஜைக்காக அல்ல. அதிலிருக்கும் மூர்த்தியை தியானிப்பதற்காகவே. சூரியனிடமும் அக்னியினிடமும் எது போனாலும் எரிந்து போகும். அப்பேற்பட்ட இடத்திலேயே பகவானை ஆராதிக்கிறோம். சூரியனிடத்தில் நமஸ்காரத்தினாலும், சந்தியோபாசனையினாலும், அக்னியினிடத்தில் ஹோமம் முதலியவைகளாலும், க்ஷேத்‌திரங்களில் சென்று தரிசனம் செய்வதன் மூலமாகவும், பஜனை மடம் முதலிய இடங்களில் கருணாமூர்த்தியான ஈஸ்வரனை மனத்தில் தியானிப்பதினாலும் மனத்திலுள்ள அழுக்கு போகும். வீட்டில் செய்வதைவிட க்ஷேத்திரங்களில் செய்வது விக்ஷேஷம்.
(continued in Part IX)


No comments:

Post a Comment