Popular Posts

Monday, January 19, 2015

SREE MAHAPERIYAVALIN ARULVAKKU PART XI


ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு பாகம் 11
(Continuation of Part 10)


29 12 2014      101
வருகின்ற திங்கட்கிழமை 05 01 2015 ஆருத்ரா தரிசனம்.  நடராஜ நர்த்தன தரிசனம் நேரில் கிடைக்கும் பாக்கியம் பெற்றவர்கள் சிலரே - பதஞ்சலி முனிவர் அதை எவ்வாறு விவரிக்கிறார். 

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு 
ஈஸ்வரனின் காலிலே போட்டிருக்கும் சலங்கை நர்த்தனமாடும்போது எப்படி ஜல் ஜல் என்று ஒலிக்குமோ, அந்த சப்தததையே பதஞ்சலி இந்த ஸ்லோகத்தில் காட்டுகிறார். ஸ்லோகத்தின் நடைகூட ஈஸ்வரனுடைய நர்த்தன தாளகதிக்கு ஏற்ப அமைந்திருக்கிறது. 

அநந்தநவரத் விலஸத் கடக கிங்கிணி
ஜலஞ்ஜலஜலஞ்ஜலரவம்
முகுந்த விதிஹஸ்தகதமத்தலலயத்வநி -
திமித்திமிதநர்த்தநபதம்
சகுந்தரதபர்ஹிரதநந்திமுக 
தந்திமுகப்ருங்கிரிடிஸங்கநிகடம்
ஸநந்தஸநகப்ரமுகவந்திதபதம் 
பரசிதம்பரநடம் ஹ்ருதி பஜ

முகுந்தன்-விஷ்ணு, விதி-பிரம்மா, பதஞ்சலி சொல்கிறார் - பிரம்மாவும் விஷ்ணுவும் தங்களின் ஹஸ்தத்தினாலே மத்தளம் வாசித்துத் தாளம் போட அவற்றுக்கு ஏற்ப ஈஸ்வரன் திமித்திமி திமித்திமி என்று நர்த்தனம் செய்கிறாராம். இப்படி, திமித்திமி திமித்திமி என்று அவர்கள் வாசிக்கிற மத்தளம், லயம், கரதாளம் இவற்றோடு ஈஸ்வரன் நடனம் ஆடும்போது அவரது கால்களில் உள்ள சலங்கைகள் ஜல் ஜல் என்று ஒலிக்கின்றன. இந்த நர்த்தன பாதத்தை யாரெல்லாம் கூடி இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பதஞ்சலி சொல்கிறார்: 
நந்தி முகதந்தி முகப்ருங்கிரிடி ஸங்க நிகடம்!
நந்தி, தந்திமுகன், ப்ருங்கி, ரிடி இவர்கள் எல்லாம் கூடியிருக்கிறார்கள். இவர்கள் தாம் பதஞ்சலியைப் பரிகாசம் செய்தவர்கள் என்றாலும் கூட பதஞ்சலி இவர்களையும் சேர்த்தே ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார். ஸங்கம்-கூட்டம், நிகடம்-சமீபம், நந்தி, தந்திமுகன், ப்ருங்கி, ரிடி இவர்கள் எல்லாம் கூட்டமாகச் சமீபத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும்படியான நர்த்தன பதம் அது. அந்தப் பதத்திற்க்கு 'குஞ்சித சரணம்' என்று பெயர். 
பரசிதம்பரநடம் ஹ்ருதி பஜ - 'பரதத்துவமாக இருக்கும்படியான நடராஜனை ஹிருதயத்தில் பஜி' என்று சொல்லுகிறது இந்த ஸ்லோகம். இதே மாதிரியாகப் பத்து ஸ்லோகங்கள் பண்ணியிருக்கிறார் பதஞ்சலி. 

02 01 2015     102
பொங்கல் விழாவை ஒரு நாளோடு கொண்டாடுவதை நிறுத்த வேண்டாம். என்றும் பொங்கும்படியான விழாவாக என்றும் கொண்டாடிக் கொண்டிருப்போம். நாடு மங்கும் பழக்கங்களைக் களைந்தெறிவோம். நாடு பொங்கும் பழக்கங்களை மீண்டும் கைக்கொள்வோம். நாம் மாத்திரம் பொங்குவது போதாது. நமது கால்நடைகளும் பொங்க வேண்டும்.  

பொடியும் புகையிலையும், சினிமாவும் சிகரெட்டும், குடியும் குதிரைப் பந்தயமும், சீட்டாட்டமும் பருத்தியாட்டமும் மற்றுமுள்ள வீணாட்டங்களும், காப்பியும் பட்டுபுடவையும் மங்கினால், நாம் மங்காமல் நமது ஒவ்வொரு குடித்தனமும் பொங்கி வழியும். நாம் நித்தியம் பொங்கும் அரிசியில் கஞ்சியும் கழுநீரும் பழுக்கும் வாழைப்பழத்தின் ஒவ்வொரு தோலும், நறுக்கும் கறிகாயின் தோலும் கண்டமும் துண்டமும் கால்நடைகளுக்கே சேரும்படி சிறு கவனம் செலுத்தினாலே போதும்; கன்று சாகாது, மாடு சாகாது. உழவனின் விளைவு பொங்கும். 
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால் 
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து 
ஓங்குபெருஞ் செந்நெல் ஊடு கயலுகளப் 
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்தமுலை பற்றி 
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் 
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்."

தைப்பொங்கலுக்கும் தை நீராடலுக்கும் பூர்வாங்கமாக அமைந்தது, இந்த மார்கழிப் பாவைப்பாட்டு. மஞ்சள் சௌபாக்கியத்தை குறிக்கும். பொங்கல் காலத்தில் பூங்கும் பரங்கிப்பூ, பூசணிப்பூ, செவ்வந்திப்பூ, துவரைப்பூ, கருவேலம் பூ ஆகிய பூக்கள் எல்லாம் காய்க்கும் மஞ்சளைப் போலவே சௌபாக்கியத்தின் சின்னங்கள். உடலை அரித்துவிடும் உப்பையும் உறைப்பையும் குறைக்க குறைக்க, ஒவ்வொரு புன்செய் தானியத்திலும் அடங்கியுள்ள இனிப்பு சுவைக்கப்படுகிறது. பழங்காலத்தில் எல்லாரும் நன்செய் தானியத்தையே சாப்பிடுவது என்ற பழக்கத்தைக் கைக்கொள்ளவில்லை. அதனால் எவ்வளவு விளைந்தாலும், பஞ்சம் தான் என்ற நிலமை அவர்களுக்கு ஏற்படவில்லை. மழையை அதிகமாக அபேக்ஷிக்காத புன்செய் தானியங்களை நிறைய விளைவித்து அதனையே அதிகமாக உட்கொள்ளும் பழக்கம் மீண்டால்தான் நாடு மங்காது பொங்கும். கஞ்சியும், கூழும், களியும் அடையும் மோரும் தயிருமே பொங்கவைக்கும் பொருள்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று கதிர்களை வைத்துக் கதிரவனை வழிபடும்போது, நாட்டையும், குடித்தனத்தையும் பொங்க வைக்கும் இவ்வெண்ணங்களையும் மூன்று முறைக்கு குறையாமல் எண்ணி எண்ணி வலம் வருவோமாக. 
இங்கனம் பொங்கிய மங்களம் எங்கணும் தங்குக.

03 01 2015     103
நம்மிடமிருக்கும் ஒரு காயத்ரீ மந்திரத்துக்காவது வீரியமிருக்க வேண்டுமானால் உபாகர்மா என்னும் கர்மாவைத் தாத்பர்யங்களை மனத்தில் வாங்கிக்கொண்டே மந்திர லோபமில்லாமல் அனுஷ்டித்தாகவேண்டும். சிரத்தையோடு உபாகர்மா செய்யாத குறையினால்தான் இக்காலத்தில் செய்யப்படும் சில கர்மாக்கள் கூட மந்திர வீரியமில்லாததால் பலனளிக்காமல் போய்விடுகின்றன. ஆகையால் உபாகர்மா அவசியம் செய்ய வேண்டும். ஒரு மந்திரத்தை நாம் ஆரம்பிக்க வேண்டுமானால் அந்த மந்திரத்தை நமக்கு ஆதியில் கொடுத்த ரிஷிகளையும் தேவதைகளையும் பூஜித்து, அவர்கள் அனுக்ரஹத்தைப் பெற்றுக்கொண்டு ஆரம்பித்தால் பலன் தரும். அவர்களுடைய தபம், சக்தி அந்த மந்திர மூலமாய் அவர்களை ஓரிடத்தில் ஆவாஹனம் செய்து (தர்ப்ப கூர்ச்சத்திலோ, பூர்ண கும்பத்திலோ, எலுமிச்சம் பழத்திலோ, பாக்குப்பழத்திலோ, பிடித்து வைத்த மணலிலோ) ஷோடசோபசாரங்களால் பூஜிப்பது ஒரு முறை. அந்த ரிஷிகளை உத்தேசித்து தீர்த்தத்தினால்  தர்ப்பணம் செய்வது ஒரு முறை. இரண்டையும்விட வீர்யவத்தான முறை அவர்களை உத்தேசித்து அக்னி முகத்தில் ஹோமம் செய்வது.

ஆதலால் ஆவணியவிட்டம் நடக்கும்போது ஹோம காலத்தில் ஒரு உபாத்தியாயர் ஹோமம் செய்து கொண்டிருந்தால் மற்றொரு உபாத்தியாயர் இப்பொழுது இன்ன ரிஷி, தேவதைக்கு ஹோமம் நடக்கிறது என்று கிருஹஸ்தர்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.

06 01 2015          104
ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் அத்வைதத்தைப் பரம தத்துவமாக ஸ்தாபித்தார். நாமும் "எல்லாம் ஒன்று, பேதமேயில்லை", என்று பிரமாதமாக வேதாந்தம் பேசுகிறோம். ஆனால் யதார்த்ததில் இந்த ஏகமான ஸத்வஸ்துவின் ஞானம் நமக்கு வரவில்லை. ஆசாரியாள் பக்தி மார்க்கத்தையும் நிலைநிறுத்தினார். க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகச் சென்று ஸ்தோத்திரம் செய்தார். நாமும் பக்தி பண்ணுகிறோம். எப்படி? கஷ்டம் வந்தால் அது நிவிருத்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வருவதற்கு வழி என்ன? இதற்கெல்லாம் அடிப்படையாக ஆசாரியாள் கர்மானுஷ்டானத்தை விதித்தார். அதை விட்டு விட்டு நாம் செய்கிற பத்தி, ஞானம் எதுவுமே நிலைத்து நிற்கக் காணோம். அவரவரும் உரிய கர்மத்தை ஆசாரங்களோடு பின்பற்றினால்தான் மனசில் ஒழுக்கம், கட்டுபாடு, சித்த சுத்தி எல்லாம் உண்டாகிப் பிறகு பக்தியும் ஞானமும் சித்திக்கும். பகவத் பாதர்கள் அத்வைத ஞானம், உபாசனை இவற்றைச் சொன்னதோடு வைதிக கர்மானுஷ்டானத்தை விதித்து, தாமும் யதி தர்மங்களைப் பூரணமாகப் பின்பற்றிக் காட்டியதால் தான் 'ஆசாரியாள்' என்பதன் பூரண லட்சணத்தையும் பெற்றிருக்கிறார். 

07 01 2015     105
பக்தர்கள் அன்பில் செய்யும் ஒவ்வோர் உபசாரமுமே எனக்குக் கனகாபிஷேகம் மாதிரித்தான் இருக்கிறது. இதெல்லாம் போதாது என்று இன்று வாஸ்தவமாகவே பொற்காசுகளை என்மேல் வர்ஷித்து அசல் கனகாபிஷேகம் செய்திருக்கிறீர்கள். இவற்றைபெற எனக்கு என்ன யோக்கியதை என்று யோசித்தால் ஒரே ஒரு காரணம்தான் தெரிகிறது. 'சங்கரர்' என்ற பெயரை நான் வைத்து கொண்டிருப்பது தான். அவர் பெயரைச் சூட்டிக்கொள்ளும் பாக்கியம் பாக்கிய வசத்தினாலேயே கிடைத்திருக்கிறது. 

அவர் எப்படிப்பட்டவர்? சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்கள் எல்லாம் அவருக்குள்ளேயே அடக்கம். சகல ஜீவராசிகளிடமும் பாய்கிற கருணை வெள்ளம் முழுவதும் அவருக்குள் அடக்கம். அப்படிப்பட்டவரின் பெயரைத் தாங்குவதற்கே இத்தனை பெருமை என்றால், எப்படி வாழவேண்டும் என்று அவர் ஆக்ஞை இட்டிருக்கிறாரோ, அப்படியே வாழ்ந்து காட்டிவிட்டால், சாசுவத கனகாபிஷேகமாக, நித்திய பொன்மாறியாக  இருக்கும். மக்கட் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் வழி காட்டியிருக்கிறார். அவர் சொற்படி வாழ்ந்து காட்டுகின்ற பெரிய பாக்கியம் யாவருக்கும் பொது. அதன்படி ஒழுகினால் என்றென்றைக்கும் கனகாபிஷேகமாக, நித்யானந்த உத்சவமாக இருக்கும்.

அறம், பொருள், இன்பம், வீடு என்று கூறப்படுகின்ற நான்கு புருஷார்த்தங்களும் ஆசார்யரின் அநுக்கிரஹத்தில் கிட்ட அவர் வழி நடப்போமாக.

09 01 2015         106 
ஹிந்துவாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் தத்துவத்தில் (பிலாஸஃபியில்) பிரிந்திருப்பதால் தோஷமில்லை. பிலாஸஃபி என்று வருகிற போது நான் அத்வைதி- எனக்கு சங்கரர்; நீ த்வைதி உனக்கு மாத்வர்; அவர் விசிஷ்டாத்வைதி அவருக்கு ராமானுஜர் என்று இருந்துவிட்டுப் போவோம். பல அபிப்பிராயங்கள் இருப்பதால் அவற்றை ஆராய்ந்து பார்த்தால் தப்பில்லை. ஆனாலும் எந்த பிரிவாய் இருந்தாலும் சரி, ஹிந்துவாகப் பிறந்த சகலரும் ஒன்று சேர்ந்து வேத வியாச பகவானின் படத்தைத் தோளில் ஏற்றிக்கொண்டு வீதி பவனி எடுத்துவர கடமைப்பட்டிருக்கிறோம். பல பேருக்குச் சிலை வைக்கிறோம். படத்திறப்பு விழாக்கள் செய்கிறோம். எனக்கு ஆசை வருஷத்துக்கு ஒரு நாளாவது ஒவ்வொரு பேட்டையிலும் இருப்பவர்கள் வியாஸாசாரியாளின் படத்தை ஐக்கியமாகக் கூடி ஊர்வலமாக எடுத்துவந்து, ஓரிடத்தில் எழுந்தருளப்பண்ணி, அங்கே சகலருக்கும் பொதுவான வேத தர்மங்களைப் பற்றி சம்மேளனம் நடத்த வேண்டும் என்பது. இது வரை இப்படி செய்யாத அபராதத்துக்குப் பிராயச்சித்தமாகச் சேர்த்து வைத்து இனிமேலாவது இப்படி வியாஸாசாரியாளுக்கு உத்சவம் செய்ய வேண்டும். ஹிந்து என்ற பேரில் உள்ள நம் எல்லோருடைய நமஸ்காரங்களுக்கும் பாத்திரமாக இருக்கிறவர் அவர். 
அவர் இன்றைக்கும் சிரஞ்சீவியாக இருக்கிறவர். ஆஞ்சநேயர், அசுவத்தாமா, மகாபலி இவர்கள் மாதிரி இப்போதும் சிரஞ்சீவியாக அனுக்கிரகம் பண்ணி வருகிறார். வைதீக தர்மத்துக்குப் பல விதங்களில் உறுதி தந்து ஆதார ஸ்தம்பம் போல் நிற்கிற ஸ்ரீ வேதவியாச மஹரிஷி ஒருத்தர் இல்லாவிட்டால் நம் மதமே இல்லை. அந்த மகா புருஷரை ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஸ்மரிக்க வேண்டும். நமக்கு சாசுவத சௌக்கியத்துக்கான வழியைக் காட்டிய வேத வியாசருக்கு நம் நன்றியைக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிரம்மாச்சாரிகளும், கிருஹஸ்தர்களும் ஆவணி அவிட்டத்தின் போது புதுப் பூணூல் போட்டுக்கொள்ளும் முன் வேத வியாசரைக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து பூஜை செய்கிறார்கள். சந்நியாசிகளில் பூணூல் போட்டுக்கொள்கிற பிரிவினர்கள் இருந்தாலும், பெரும்பாலும் பூணூலை அறுத்துப் போட்ட சந்நியாசிகளே இருக்கிறார்கள். மற்ற ஆசிரமக்காரர்கள் உபாகர்மத்தின் போது வியாசருக்குத் தர்பணம், ஹோமம் செய்து நன்றி செலுத்திவிடுகிறார்கள் என்றால் சந்நியாசிகள் மட்டும் அப்படிச் செய்யாமல் இருக்கலாமா? பிரம்மா சூத்திரம் என்ற வேதாந்தப் பிரமாண நூலே இவர் செய்ததுதானே! அப்படி நன்றி தெரிவித்துச் செய்வதுதான் சாதுர்மாசியா விரத ஆரம்பத்தில் சந்நியாசி செய்யும் வியாச பூஜை.

10 01 2015      107
வியாசரைவிட நமக்குப் பரம உபகாரம் செய்த இன்னொருவர் இல்லை. அவர் வேதங்களை விபாகம் செய்ததோடு நிற்கவில்லை. வேதங்களைச் சில பேர் தான் நியம ஆசாரங்களோடு ரக்ஷிக்க முடியும். ஆனால் வேதத்தின் தாத்பர்யமான அஹிம்சை, சத்யம், தர்மம் முதலியவை சகல ஜனங்களுக்கும் திரிந்து, அவர்கள் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மிகுந்த கருணை கொண்டார் வியாசர். இதற்காகவே வேதத்தில் ஒவ்வோர் இடத்தில் நுணுக்கமாகச் சொல்லியிருக்கிற விஷயங்களைச் சகல ஜனங்களும் ரசிக்கிற கதா ரூபத்தில்  விளக்கிக் காட்டுவதற்கு நுண்ணிய வஸ்துவை பூதக்கண்ணாடியால் காட்டுகிறது போல், பதினெட்டுப் புராணங்களையும், மகா பாரதத்தையும் எழுதி அனுகிரஹம் செய்தார் ஸ்ரீ வியாச பகவான். அவரவர்கள் இஷ்ட தேவதயை முழு முதல் தெய்வமாக ஆராதிப்பதற்கு சௌகரியமாக விசால மனசு வாய்ந்த வியாசர் பதினெட்டு புராணங்களையும் தந்திருக்கிறார். ஈஸ்வரன், விஷ்ணு, அம்பாள், சுப்பிரமணியர் என்று ஒவ்வொரு தெய்வங்களைப் பற்றியும் ஒவ்வொரு புராணமாகக் கொடுத்தார். சமீப காலம் வரையில் நம் தேசத்தில் எழுதப்படிக்கத் தெரியாத கிராம ஜனங்கள் கூடப் பொய், புனைசுருட்டு, திருட்டு, லஞ்சம், நாஸ்திகம் இவற்றுக்குப் பயந்து கூடிய வரையில் ஒழுக்கத்தோடு, தெய்வபக்தியோடு, திருப்தியோடு இருந்து வந்தார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் வியாச பகவானின் பிரசாதமான பாரதமும் புராணங்களும் தான்.

11 01 2015      108
தக்ஷிணாமூர்த்தி ஆதி குரு என்றாலும் அவர் பேசாத குரு. பேசி உபதேசிக்கிற குரு என்று வருகிற போது நம் அத்வைத வேதாந்த ஸ்மார்த்த சம்பிரதாயத்தில் முதல் குரு சாக்ஷாத் நாராயணன்தான். அப்புறம் அவரது பிள்ளையான பிரம்மா. அப்புறம் பிரம்மாவின் பிள்ளையான வஷிஷ்டர். வஷிஷ்டருக்குப் பின் அவருடைய புத்திரரான சக்தி. சக்திக்குப் பிறகு அவரது புத்திரரான பராசரர். பராசரர் தான் விஷ்ணு புராணம் எழுதி உபகரித்தவர். இவருடைய புத்திரர் தான் வியாசர். வியாசருக்குப் பின் நம் சம்பிரதாயத்தின் குரு அவருடைய புத்திரரான சுகர். மகா பிரம்ம நிஷ்டர் இவர். பிறந்ததிலிருந்தே பரப்பிரும்மமாக இருந்ததால் கல்யாணமே பண்ணிக் கொள்ளாதவர். அதனால் இவருக்கு பிள்ளையும் இல்லை. அப்படியானால் இதுவரை தகப்பனார் பிள்ளை என்று தொடர்ந்து வந்த குருபரம்பரை இவரோடு நின்று விட்டதா? இல்லை. இவருக்கப்புறம் அது குரு-சிஷ்யர் என்ற புதுக்கிரமத்தில் விருத்தியாயிற்று. சுகருடைய சிஷ்யர் தான் கௌடபாதர்.  கௌடபாதர் சந்நியாச ஆசிரமம் சுவீகரித்தவர். இனிமேல் சந்நியாச பரம்பரையிலேயே வேதாந்த சம்பிரதாய ஆசாரியர்கள் வருகிறார்கள். கௌடபாதருடைய சிஷ்யர் கோவிந்த பகவத் பாதர். கோவிந்தரின் சிஷ்யர்தான் நம் சங்கர் பகவத் பாதர்கள். சங்கரருடைய நாலு முக்கியமான சிஷ்யர்கள் பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர், ஸூரேசுவரர் ஆகியவர்கள். இதற்ககப்புறம் ஒவ்வொரு சங்கர பீடத்திலும் இன்று வரை வரிசையாக வந்திருக்கிற ஆசாரியார்கள் எல்லோரும் நம் ஆசாரியர்கள் ஆவார்கள். இந்த குரு பரம்பரையைச் சொல்லுகிற ஸ்லோகத்தை எல்லோரும் சொல்லி நமஸ்கரிக்க வேண்டும். அதைச் சொல்லுகிறேன்.

நாராயணம் பத்ம புவம் வசிஷ்டம் 
சக்தீம் ச தத்புத்ர பராசரம்ச
வியாசம் சுகம் கௌடபாதம் மஹாந்தம்
கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய சிஷ்யம்
ஸ்ரீ சங்கராச்சார்யம் அதாஸ்ய பத்மபாதம்ச
ஹஸ்தாமலகம் ச சிஷ்யம் 
தம் தோடகம் வார்த்திக காரம் அன்யான்
அஸ்மத் குரூன் சந்ததம் ஆனதோஸ்மி.

இதில் 'பத்மபுவன்' என்பது பிரம்மா. 'வார்த்திககாரர்' என்பது 'ஸூரேச்வரர்'. மற்ற பெயர்கள் உங்களுக்கே புரியும்.
Bottom of Form


12 01 2014 முதல் 11 01 2015 வரை Sage of Kanchi-ல் எழுதி வந்த மஹாபெரியவாளின் அருள்வாக்கு இன்றுடன் (11 01 2015) 108 பூர்த்தியாகிறது.  முன்பே கூறியிருந்தபடி என்னிடம் உள்ள பல புத்தகங்களிலிருந்து எனக்கு பிடித்தவற்றை ஸேஜ் ஆஃப் காஞ்சியில் பதிவு செய்து வந்தேன். இம்முயற்சிக்கு ஆதரவு அளித்த எல்லோருக்கும் என் நமஸ்காரங்கள். இந்த 108 ஐயும் தொகுத்து இப்போது இங்கு blog-ல் பதிவு செய்து உள்ளேன் --sarayutoayodhya.blogspot.in

படிப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பக்கத்தில் பத்து என்று 11 பாகங்களாக 108 -  ஐ பிரித்து பதிவு செய்துள்ளேன்.

An interesting thing emerged during this is that several passages in new books by recent authors claiming copyright find a place even in books printed in 1960s by other institutions.

நன்றியும் நமஸ்காரங்களும்.
ramachandranvenkataraman
Bottom of Form


SREE MAHAPERIYAVALIN ARULVAKKU PART X

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு பாகம் 10
(Continuation of Part 9)


03 12 2014      91
மழயை உண்டாக்கறது சூரியனோட நானூறு கிரணங்கள். ஹலாதினீன்கற முப்பது கிரணங்கள் பனியைக் கொடுக்கிறது. வஸந்தருது, கிரீஷ்ம ருது இரண்டிலேயும் முன்னூறு கிரணங்கள் ஒளி கொடுக்கறது. சரத்ருது, வர்ஷருது இரண்டிலேயும் நானூறு கிரணங்கள் பிரகாசத்தைத் தர்றது. ஹேமந்தருது, சிசிரருது இரண்டுக்கும் முன்னூறு கிரணங்கள் போஷணை பண்றது. உதயமாகறப்போ ருக் வேத புருஷனா இருக்கார். மாத்யான்னீகத்திலே யஜூர் வேத ரூபமாயிருக்கார். சாயாறட்சையிலே சாமவேத சொரூபியாயிருக்கார். க்ஷணம், முஹூர்த்தம், நாழிகை, பகல், இரவு, பக்ஷம், மாசம், ருது, அயனம், வருஷம் இதெல்லாம் சூரியனாலே தான் கணக்கிடப்படறது.
  
தீர்த்தானாம் பரமம் தீர்த்தம் மங்களானம் ச மங்களம் I
பவித்ராணாம் பவித்ரம்ச ப்ரபத்யேஹம் திவாகரம் II

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, தினமும் முடிஞ்சவரை சொல்லி சூரிய நமஸ்காரம் பண்றவன் பாபங்களெல்லாம் தீர்ந்து முடிவில் மோட்சத்தை அடைவான். இதை நான் சொல்லலை. பிரம்மா சொல்லியிருக்கார். 

04 12 2014     92
மனம் ஒரு பூதம் போன்றது. விக்ரமாதித்தன் கதையில் சொல்லப்பட்ட வேதாளத்தைப் போன்றது. வேதாளம் கட்டுப்பட்ட பின்பு எவ்வளவு காரியங்களைச் செய்ததோ, அதைப் போலவே மனமும் செய்யும். அந்த மனத்தை ஸ்வாதீனப்படுத்துவதுதான் யோகமென்பது. அந்த யோகத்திற்கு அங்கம் அஹிம்சை. மனத்தை வசப்படுத்தியவர்கள், 'அஹிம்சையை அனுசரித்தோம், மனம் வசப்பட்டது' என்கிறார்கள். நித்தியம் மனத்தினாலும், வாக்கினாலும், உடம்பினாலும், பணத்தினாலும் நல்ல காரியங்களைச் செய்துவர வேண்டும். நமக்கு கிடைக்கும் பணத்தில் ஒரு தம்பிடியையாவது ஒவ்வொரு நாளும் தர்மத்துக்காக உண்டியல் கட்டிப்போடவேண்டும். அந்த பணத்தை குடும்பத்துக்கு பிரயோசனப்படுத்தாமல் தர்மத்துக்கு விநியோகப்படுத்தவேண்டும். நம்முடைய பணமெல்லாம் நம்முடையதல்ல என்ற ஞாபகம் இருக்க வேண்டும். இந்த உடம்பு போனவுடன் அது நம்முடைய சம்பந்தத்தை விட்டுவிடும். அந்த பணத்தை நம்முடையதாகச் செய்ய வேண்டுமானால் நாம் எங்கே போனாலும் செல்லக் கூடிய நோட்டாக மாற்ற வேண்டும். மேலுலகத்தில் இந்த நோட்டு செல்லாது. இந்த நோட்டை தர்ம நோட்டாக மாற்றிவிட்டால் அது எங்கேயும் செல்லும். அப்பொழுது இந்த பணமும் நமக்கு சொந்தமாகும். ஆகையால் குழந்தை முதல் பெரியவர்கள் வரையில் தனித்தனித் தர்மத்துக்காக ஒவ்வொரு உண்டியல் வைத்துக் கொள்ளவேண்டும். நாம் பிறந்தது முதல் இந்த மாதிரி பழக்கங்களை வைத்து கொண்டிருந்தால் இதற்குள் எவ்வளவோ செய்து இருக்கலாம். நம்முடைய காரியத்தை நாம் மறந்து விட்டோம். குழந்தைகளுக்கென்றே இப்போது தர்ம உண்டியல் ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்காக இன்சூர் செய்வது இல்லையா? இந்த இன்சூரன்ஸ் இந்த பிறவிக்கு பின்பும் (ஆஃப்டர் லைஃப்) உபயோகப்படுமாதலால், இதை வாழ்வுக்குப் பிறகுமுள்ள க்ஷேம நிதி (ஆஃப்டர் லைஃப் இன்சூரன்ஸ்) என்று கருத வேண்டும். 

07 12 2014      93
ஒரு மலையடிவாரத்தில் நாம் இருக்கிறோம். நம்முடைய கையில் ஆயிரம் ரூபாய் பணம் இருக்கிறது. அவ்வளவும் அரையணாக் காசாக இருக்கிறது. அப்பொழுது திருடர்கள் வருகிறார்கள். பலமான கலகம் நடக்கும் போலிருக்கிறது. மலை மேல் ஏறி அப்புறம் போய்விட்டால் நமக்கு பயமே இல்லை. அப்பொழுது ஒருவன் வந்து இந்த ஆயிரம் ரூபாய்க்கும் நோட்டு வேண்டுமா என்று கேட்கிறான்! நாம் என்ன செய்வோம்; உடனே அவனிடம் சில்லறை மூட்டையை தள்ளிவிட்டு ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு மலையேறி போய்விடுவோம். ஆனால் அந்த நோட்டு மலைக்கு அப்புறமுள்ள தேசத்தில் செல்லும் நோட்டாக இருக்க வேண்டும். உடம்பிருக்கும் பொழுது உபயோகப்படக்கூடிய காரியங்களைத் தவிர அதற்கு பின்பும், பலகோடி வருஷங்களுக்கும் எப்பொழுதும் உபயோகப்படக்கூடிய காரியங்களாக நாம் செய்ய வேண்டும். இந்த ஊர் நோட்டு ருஷ்யாவில் செல்லாது. எல்லா ஊருக்கும் ஒரு ராஜா இருந்தால் அவனுடைய முத்திரையுள்ள நோட்டு எங்கும் செல்லும். இந்த பதினான்கு லோகங்களுக்கும் ஒரு ராஜா இருக்கிறான். அவன் தான் பரமேஸ்வரன். அவனுடைய சகல ராஜ்யங்களிலும் செல்லும் நோட்டு ஒன்று இருக்கிறது. அது எப்பொழுதும் எவ்விடத்திலும் செல்லும். அது எது? அது தான் தர்மம்.

13 12 2014      94
பக்தியின் லட்சணத்தையும் பகவத் பாதர்கள் சிவானந்த லஹரியில் வெகு அழகாக வர்ணித்திருக்கிறார். ஐந்து உதாரணங்களைக் கொடுத்து வர்ணித்திருக்கிறார். "அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துதானே ஒட்டிக் கொள்கிறதோ, ஊசி எப்படிக் காந்தத்தால் கவரப்படுகிறதோ, பதிவிரத்தை எப்படித் தன் பத்தியின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ, கொடி எப்படி மரத்தைத் தழுவி வளருகிறதோ, நதி எப்படி சமுத்திரத்தில் கலக்கிறதோ, அப்படியே பசுபதியின் பாதாரா விந்தங்களில் சதா சர்வ காலமும் மனத்தை அமிழ்த்தியிருப்பதுதான் பக்தி என்பது!" என்கிறார் ஸ்ரீ ஆசார்ய சுவாமிகள்.  
ஏறு அழிஞ்சில் என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஆகர்ஷ்ண சக்தியால் நகர்ந்து வந்து மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக்கொண்ட பின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும் என்கிறார்கள். பகவானிடமிருந்து பிரிந்து வந்திருக்கிற நாம், இப்படியே எப்போதும் அவன் பக்கமாக நகர்ந்து நகர்ந்து போய், முடிவில் அவனிடம் ஓட்டிக்கொண்டு ஒன்றாகி விடவேண்டும். ஊசி காந்தத்தை நோக்கிப் பாய்ந்து ஒட்டிக் கொள்வது அடுத்த உதாரணம். காந்தததில் சேர்ந்த ஊசிக்கும் காந்த சக்தி உண்டாகி அது மற்ற இரும்பு பொருட்களை இழுப்பது போல், பக்தனுக்கும் பகவானின் குணங்களும் சக்திகளும் உண்டாகும் என்று இந்த உதாரணத்தால் காட்டுகிறார். அடுத்தது பதிவிரதையின் உதாரணம். பதிவிரதையின் நினைவு, பேச்சு, காரியம் அனைத்தும் பதியை சுற்றியே இருப்பது போல், நம் மனோ, வாக்கு, காரியங்கள் பகவானையே பற்றி இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது. பதியை மூல ஸ்லோகத்தில் 'விபு' என்கிறார். சர்வ வியாபகன் என்பது இதன் பொருள். இதனால் பகவான் ஏதோ ஓர் இடத்தில் மட்டும் இல்லாமல் எங்குமாக, எல்லாமாக இருப்பதாகப் பாவிக்க வேண்டும் என்று உணர்த்துகிறார். அடுத்த படியாகக் கொடியின்
உதாரணம். கொழுகொம்பைச் சுற்றிக்கொள்கிற கொடியை நாம்  
சிறிது விலக்கிப் பிரித்துவிட்டால் கூட அது படாதபாடுபட்டுக் கொஞ்ச நேரத்திலே மறுபடியும் கொம்பை வளைத்து சுற்றி கொண்டு விடும். நம் மனசை ஈஸ்வர ச்மரணியிலிருந்து அழைக்கழிக்கிற இடைஞ்சல்கள் எத்தனை வந்தாலும், நம் லட்சியத்தைப் பிடிவாதமாகப் பிடித்திருக்க வேண்டும் என்பதை இந்த திருஷ்டாந்தம் உணர்த்துகிறது.  கடைசியில் நதி சமுத்திர உபமானம். இதுவே பரம அத்வைதம். கடல் நீர் தான் மழையாக விழுந்து பிறகு ஆறாகியிருக்கிறது. இரண்டும் வேறு அல்ல. ஒரு நதியானது எந்த மலை உச்சியில் பிறந்தாலும் அலுக்காமல் சளைக்காமல் ஓடி வந்து கடைசியில் கடலில் கலந்து, தன்னுடைய தனி பெயரையும் உருவத்தையும் இழந்து கடலாகவே ஆகி விடுகிறது. கடல் அதை எதிர்கொண்டு, அக்கடல் எதிர்க்கிறது. இதனால் தான் நதி சங்கமங்களுக்குச் சிறிது தூரம் இப்பாலே அந்த ஆற்றின் ஜாலம் உப்புக்கரிக்கிறது. இப்படியே நாமும் உண்மையான பக்தி செலுத்தினால் கருணா சமுத்திரமான பகவான் முன்னே வந்து நம்மை ஆட் கொண்டு தானாக்கி கொள்வான்.

15 12 2014      95
கார்த்திகை சோமவாரம் 
சிவனுடைய விரதங்களிலே சிறந்தது சிவராத்திரி. மாசி மாதத்துலே வருகிற கிருஷ்ணபட்ச சதுர்த்தியன்று அர்த்த ராத்திரி வரை ஒருவன் ருத்திர பாராயணம் பண்ணி சிவலிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணினால் மகாபாபங்களும் நிவர்த்தி ஆகிறது. சூர்ய அஸ்தமனமானதும் ஸ்நானம் பண்ணனும். துவைத்து உலர்த்திய வஸ்திரத்தைத்தான் கட்டிக்கணும். அந்தக் காலத்திலே ஒவ்வொரு ஜாமத்திலேயும் மண்ணாலே லிங்கம் பண்ணித்தான் பூஜை பண்ணுவா. களிமண் லிங்கத்துக்குத் தான் அபிஷேகம் நடக்கும். லிங்கம் கரையாமல் அப்படியே இருக்கும். ஒவ்வொரு ஜாம பூஜையும் ஒவ்வொருவிதமாக நடத்தறது விஷேஷம். அவாவா சக்திக்கு ஏற்றபடியும் பூஜை பண்ணலாம். ஸ்ரீம் பவாய நம: ஸர்வாய நம: ருத்ராய நம: பசுபதையே நம: மஹாதேவாய நம: பீமாய நம: ஈசானாய நம: பரமாத்மனே நம
என்கிற 
அஷ்ட மந்திரங்களையாவது சொல்லி பூப்போட வேண்டும். பூஜை சீக்கிரமே முடிந்துவிட்டால் பிறரைப் பற்றி வம்பு பேசக்கூடாது. இதர விஷயங்களிலும் மனதைச் செலுத்த கூடாது. சிவபெருமானுடைய புண்ணியக் கதைகளை படிக்க வேணும். படிக்க முடியாதவர்கள் பிறத்தியாரைப் படிக்க வைத்தும் கேட்கலாம்.

17 12 2014      96
பஞ்சாயதன பூஜையைப் பற்றி 
ஈஸ்வரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் - இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர். அங்கங்களோடு கூடிய விக்ரஹங்களாக இல்லாமல், இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாகனம் செய்து, பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.
ஈஸ்வரனுக்கு உள்ள பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் சுவரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகியாற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான சாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவமான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணபத்ர நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்த தேசம் முழுவதையுமே வைத்தது போலாகும். 
இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்களில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது.  எல்லாம் சின்ன சின்ன கற்கள்.  எல்லாமாகக் கொஞ்சம் இடைத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவை இல்லை. ஒரு சின்ன சம்படத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹனம் பண்ணி, நாலு உத்திரிணி தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணிச் சந்தனம், குங்குமம், அக்ஷதை வைத்து அர்ச்சனை செய்து, நைவேத்தியம் காட்டலாம். வெளியூருக்கு போகும்போது கூடப் பத்து நிமிஷம் இப்படி பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்ச்சனைக்கு பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம்.  வில்வத்தையும், துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்து போனால் ஈஸ்வரணையும், விஷ்ணுவையும் அதனாலே அர்ச்சிக்கலாம். மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்திற்க்குச் சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக் கொள்ளவேண்டாம். காய்ந்த திராக்ஷைப் பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம். 
ஐந்து மூர்த்திகளை, துளசி-வில்வ பத்திரங்கள், திராக்ஷை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்படத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம். பூஜை என்பதற்காக சிரமம் எதுவுமே இல்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லாரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம்.

வீட்டில் இருந்ததால் 'மகா நைவேத்தியம்' எனப்படும் அன்னத்தை சுவாமிக்குக்  காட்ட வேண்டியது அவசியம்.

19 12 2014      97
சாவதற்குள் இந்த மனத்தை அடக்க ஒரு வழி தேடியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறப்பு தான். மறுபடி ஓயாத ஓட்டம் தான்; எனவே இந்த ஜன்மாவிலேயே, காமமும் குரோதமும் ஏற்படுவதற்கு எவ்வளவோ ஹேதுக்கள் இருக்கும்போதே, இவற்றின் நடுவில் மனத்தை அடக்க முழுப் பிரயத்தனமும் பண்ண வேண்டும்! "அப்படிப் பண்ணினவன் தான் 'யுக்தன்' என்கிற யோகி; அவன் தான் 'ஸூகி' என்கிற உண்மையான ஆத்மா!" என்கிறார் கிருஷ்ண பகவான். யோகமெல்லாம் ரிஷிகள் சமாச்சாரம், நமக்கு வருமா?" என்று விட்டுவிடலாகாது. மருந்து யாருக்கு வேண்டும்? வியாதி உள்ளவனுக்குத் தானே? நமக்குத் தான் மனோவியாதி. அதாவது மனம் என்ற வியாதி - இருக்கிறது. எனவே நாம் தான் அதை அடக்குகிற மருந்தைச் சாப்பிட்டாக வேண்டும்.

மனத்தை அடக்க இரண்டு சாதனங்கள் உண்டு. ஒன்று பகிரங்க சாதனம்; மற்றது அந்தரங்க சாதனம். வெளிமுகமாகச் செய்வது பகிரங்க சாதனம். உள்ளுக்குள்ளேயே செய்து கொள்வது அந்தரங்க சாதனம். இரண்டையும் கொண்டு மனத்தை முதலில் நல்லத்தில் ஒருமுகப்படுத்தி, பிறகு நினைவற்ற நிலைக்கு வரவேண்டும். தான தர்மம் செய்வது, சந்தியாவந்தனம், யாகம், பூஜை, பரோபகாரம் எல்லாம் நல்லதில் மனத்தை செலுத்தும் பகிரங்க சாதனம். தியானம் மிகச் சிறந்த அந்தரங்க நிலை. அதற்கு அனுகூலமாக இருக்கிற மற்ற அந்தரங்க சாதனங்கள் ஐந்து. அவை அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் என்பவை. எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனத்தை அன்பு மயமாகச் செய்துகொள்வது அஹிம்சை. மனம், வாக்கு, காயம் மூன்றையும் உண்மையிலேயே ஈடுபடுத்துவது சத்தியம். அஸ்தேயம் என்றால் 'திருடாமல் இருப்பது' என்று அர்த்தம். அதாவது, பிறர் பொருள்களில் ஆசையே எழாதபடி மனத்தை வைராக்கியமாக்கிக் கொள்வது. சௌசம் என்றால் தூய்மைப்  படுத்திக்கொள்வது. இந்திரிய நிக்ரஹம் என்பது புலன்களை அவற்றின் போக்கில் விடாமல், ஒவ்வோர் இந்திரியத்துக்கும் இவ்வளவு தான் ஆகாரம் கொடுப்பது என்று நிர்ணயமாக வைத்துக்கொள்வது. கண் இதைப் பார்க்கக்கூடாது, காது இதைக் கேட்கக் கூடாது, வாய் இதைத் தின்னக்கூடாது - பேசக்கூடாது, உடம்பு இந்த பாவத்தைச் செய்யக் கூடாது என்று தடுத்து நிறுத்துவதே இந்திரிய நிக்ரஹம்.

இந்த ஐந்தும் 'சாமானிய தர்மங்கள்' எனப்படும். அதாவது நமது வைதீக மதத்தைச் சேர்ந்த சகல பிரிவினரும் இவற்றை அனுஷ்டிக்க வேண்டும் என்பது மனுதர்மம். 

22 12 2014      98
ரயிலடியில் பிரயாணிகள் வந்திறங்கியதும் ஜட்காக்காரன், ரிக்க்ஷாக்காரன், டாக்ஸிக்காரன் என்று பல பேர் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எவனுடைய வண்டியில் ஏறிக்கொண்டாலும் போக வேண்டிய இடத்துக்கு போய் சேரலாம். வண்டிக்காரன் கிராக்கி பிடிப்பதற்க்காகப் போட்டி போடுவதைத் தவறு என்று சொல்வதற்கில்லை. அது அவர்கள் பிழைப்பு. ஆனால் ஒரு லட்சியத்துக்கு அழைத்து செல்வதற்காக வெவ்வேறு மதஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற காரியம். நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது. அதில் பல வளைவுகள் இருக்கின்றன. எல்லா வளைவுகளிலும் ஒரே அளவாக கட்டப்பட்டவைதாம். ஆனாலும் ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்தந்தே வளைவே பெரிதாகவும், மற்றவை சின்னதாகவும் தெரியும். இப்படியே அந்தந்த மதஸ்தர்களுக்கும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால், பிறரை அதற்கு அழைக்கிறார்கள். ஆனால் எல்லா வளைவுகளும் ஒரே அளவு தான். யாரும் தங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலக வேண்டியதில்லை. 
மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் அனுஷ்டானங்களிலும் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒரே போல் ஆக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே, எல்லா மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு இருப்பது அவசியம். 'யுனிஃபார்மிடி' அவசியமில்லை. 'யுனிடி' இருப்பதே அவசியம்.  

24 12 2014      99
சங்கம் என்கிற சொல்லுக்குக் கூட்டம் என்று பொருள். 'சத்-சங்கம்' என்றால் சாதுக்கள்-சான்றோர்களின் கூட்டம் என்று பொருள். 'சத்' என்பது மெய்ப்பொருளைக் குறிக்கும். 'அசத்' அதற்கு நேர்மாறானது. "என்ன அசத்தாக இருக்கிறானே!" என்கிறோம், ஒன்றும் பிரயோஜனம் இல்லாதவன் என்ற பொருளில். 'சத்' பயனுள்ளது. அசத் பயனற்றது. பயனுள்ள விஷயங்களைத் தெரிந்து கொண்டால் தானே பிறவிப்பயனை அடையமுடியும்? அதற்குச் சான்றோர் சேர்க்கை தேவைப்படுகிறது. அதுவே சத்சங்கம். பரம்பொருளுடைய அருள் எல்லோருக்கும் கிடைக்க வழிகாட்டக்கூடிய இடம்.
முன்பெல்லாம் வீடுகளும் கோவில்களும் சத்சங்கமாக இருந்தன. ஆனால் இப்போது..? குழந்தைகளுக்குக் காலை முதல் இரவு தூங்கும் வரை சிறந்த வாழ்க்கை முறைக்குத் தேவையான நல்ல குணங்களை எடுத்துரைக்கவும், தெய்வ வழிபாட்டில் ஈடுபடுத்தவும் வீடுகளில் வாய்ப்பு அரிதாகிவிட்டது. பள்ளிக்கூடம் அல்லது வேறு எங்காவது அனுப்பி வைத்து அன்றாட வாழ்க்கைக்குத் தேவயானவற்றை மட்டும் கற்றுக்கொடுக்கிறோம். பெரிய பெரிய நகரங்களில் வாழும் சில குடும்பங்களில் குழந்தைகளை 'ஆயா' மூலம் கவனிப்பதால், குழந்தைகள் யார் தாயார், யார் தகப்பனார் என்றுகூடத் தெரியாமல் வளர்ந்துவிடுகிறார்கள். மற்ற இடங்களில்கூடக் குழந்தைகள் காலையில் எழுவதற்கு முன்பே பெற்றோர்கள் வேலைக்கு சென்று, இரவு குழந்தைகள் தூங்கிய பிறகே வீடு வருவதால், இது போல் நிலைமை ஏற்படுகிறது. 

நல்ல விஷயங்களைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களைச் சமூகப் பிரக்ஞை உள்ளவர்களாக செய்வது ஒரு புறம் இருக்கப் பெரியவர்களுக்குமேகூடப் பொழுது இருப்பதில்லை. ஆயினும் திருப்தி தரும் ஒரு விஷயம் என்னவென்றால் 'சத்சங்கம்', 'ஆஸ்திகசபை' போன்றவை ஏற்பட்டு ஈடுசெய்ய முயல்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாரத்திற்க்கு ஒரு நாளோ, இரண்டு நாளோ, ஆபீசுகளில் லீவு விடுகிற மாதிரி, எப்பொழுதெல்லாம் சௌகரியப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நமது மதத்தையும், நல்ல குணங்களையும் தெரிந்துகொள்ள இந்த மாதிரி சத்சங்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

27 12 2014      100
காமத்தை வென்றாலும் குரோதத்தை வெல்லமுடியாமல் போவதுண்டு. நளசரித்திரத்தில் கோபத்தின் பிரதாபத்தைப் பற்றிப் பிரமாதமாக சொல்லியிருக்கிறது. நளனை அதரும ரூபமான கலிபுருஷன் பீடித்தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த கலிக்கு பல சேனாதிபதிகள் இருப்பதாக நளசரித்திரத்தில் சொல்லி இருக்கிறது. யார் அந்த சேனாதிபதிகள்? காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் இவை எல்லாம் தாம் கலியின் சேனாதிபதிகள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சக்தியை பிரகடனப்படுத்திப் பேசிக்கொள்கிறார்கள். அப்போது குரோதன், "காமனுடைய அம்பும் நுழைய முடியாத ஒரு கோட்டையை நான் பிடித்திருக்கிறேனாக்கும்" என்று தன் பிரதாபத்தைச் சொல்லிக்கொள்கிறான்.


அது என்ன கோட்டை? துர்வாச மஹரிஷியின் ஹிருதயம் தான் அந்த கோட்டை. பெண்ணாசை என்கிற காமம் துர்வாசரை நெருங்கவே முடியாது. ஆனால் அப்படிப்பட்டவரும் மகாகோபிஷ்டராக இருந்தாரல்லவா? இதனால் தான், "காமன் அம்பு புகாத கோட்டையும் தன்வசத்தில் இருக்கிறதாக்கும்" என்று குரோதன் பெருமையடித்துக்கொண்டான். மகா பெரியவரான துர்வாசரே கோபத்திடம் கோட்டைவிட்டார் என்பதிலிருந்து நாம் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். துர்வாசர் மகாத்மா; அம்பாளின் பரமா பக்தர்; பரமசிவ அம்சம் என்றே அவரைச் சொல்வார்கள். இத்தனை மஹிமை இருந்தாலும் இப்போது அவரைப்பற்றி சொன்ன மாத்திரத்தில் அந்த மஹிமை எதுவும் தெரியாமல், அவருடைய கோபம்தான் நமக்குத் தெரிகிறது.

(continued in Part XI)